மாமியார் வீட்டிற்கு சென்ற பெண் டிப்பர் மோதி பலி! யாழ் கோப்பாயில் சோகம்!

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில் உள்ள கணவரின் தாயாரின் வீட்டிற்கு சென்று கொன்டிருந்த போதே குறித்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்பட்டது.

இதன் போது டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில் டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதில் 34 வயதுடைய இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Exit mobile version