இலங்கை

தமிழர்களையும் முஸ்லீம்களையும் அந்தரங்கத்திற்குள் ஏற்று கொள்ளுங்கள்!

சிங்கள பௌத்த அறிவுசார் சமூகமே, தமிழர்களையும் முஸ்லீம்களையும் உங்கள் அந்தரங்கத்திற்குள் ஏற்றுகொள்ளுங்கள். அவ்வாறுசெய்து போதிய முதலீடுகளை நாட்டிற்குள் வரவழையுங்கள். இதன் மூலமாக எமது அந்நிய செலாவணிப் பிரச்சனைகளை நாங்கள் விரைவில் தீர்த்துக் கொள்வோம். இந்தநாட்டைக் காப்பாற்ற நாம்யாவரும் இணைய வேண்டிய முக்கிய தருணம் இதுதான் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2020ம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும்தெரிவிக்கையில்,

மிகவும் மனவருத்தத்துடன் தான் நான்2020ம் ஆண்டின் மத்தியவங்கி அறிக்கை பற்றிய விவாதத்தில் பேசஎழுந்துள்ளேன். இதுவரை காலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் திருப்பிக்கட்டி வந்தநாங்கள் அந்தநற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோம்.

ஏதாவதுஒரு சர்வதேசகடனை உரியவாறு உரியநேரத்தில் கட்டாதுவிட்டால் அதுமற்றைய சகல கடன்களையும் பாதிக்கும். அவ்வாறு நடந்தால் அது மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுக்கும்.

எமது கடன்காரர்கள் யாவரும் உடனே தமதுகடன்களை முழுமையாக நாங்கள் திருப்பிக்கட்ட வேண்டும் என்று கேட்பார்கள். அதேநேரத்தில் அவற்றைக் கட்ட எம்மால் வேறுகடன்களைப் பெறமுடியாத ஒரு ஆபத்துநிலை ஏற்படும். உண்மையில்எமக்குக் கடன்தர எவரும் முன்வரமாட்டார்கள். சீனா போன்ற ஒருநாட்டின் அடிமை நாடாகவன்றி எம்மால் தனித்தியங்க முடியாமல் போய்விடும்.

சீனகம்யூனிசக் கட்சியின் 100வது வருடத்தை முன்னிட்டு நாங்கள் தங்கநாணயங்களை வெளிக்கொண்டு வருகின்றோம். ஏற்கனவே பல நிறுவனங்களின் முன் ஆங்கில, தமிழ் ஏன் சிங்களமொழி கூடப்பாவிக்கப்படாமல் சீனமொழியில் மட்டும் பெயர்ப்பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை எமக்கு நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துதான் இவ்வாறான செயல்களில் நாம்; ஈடுபடுகின்றோமோ? நான் அறியேன்.

ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் பூகோளஅரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதுபற்றி சிந்தித்தோமா? முகத்தைப் பகைத்து மூக்கைவெட்டும் நடவடிக்கைகளில் நாம்ஈடுபட்டு வருகின்றோம்.

முக்கியமாக எமக்குக் கவலையளிக்கும் ஒருவிடயந்தான் எமது மீண்டு வரும் கடன்களை அரசாங்க வருமானத்தைக் கொண்டு அடைக்கமுடியாமல் இருப்பது. 2020ல் கொண்டு வரப்பட்ட வரிக்கொள்கை அரசவருமானத்தை வெகுவாகக் குறைத்தது.

பொதுமக்களுக்கு இது ஒருவரப்பிரசாதமாக அமைந்திருந்தும் தற்போதைய வாழ்க்கைச் செலவின் அபரிமிதமான அதிகரிப்பானது குறித்தவரிக் கொள்கையின் நன்மைகளை மக்களுக்குக் கிடைக்கப்பண்ணாமல் ஆக்கிவிட்டது.

பொருளாதார விருத்தியின்றி அரசதிறைசேரி சதாகாலமும் நெருக்குதலுக்கு இலக்காகி நிற்கின்றது. இவ்வாறான நிலையில் எமதுகடன்களை அடைக்கப் போதுமான வருமானங்களை எம்மால்பெற முடியாதிருப்பதால் மாதச்சம்பளங்களைக் கூடக்கட்ட முடியுமோ என்றநிலைக்கு நாங்கள் வந்துள்ளோம்.

ஆகவே அரசாங்கம் தொடர்ந்தும் கடன்எடுக்க வேண்டிய ஒருநிலையிலேயே தற்போது இருக்கின்றது. நாங்கள் கடன்பொறி ஒன்றில் அகப்பட்டுள்ளோம். ஆனால் அதில்இருந்து மீளவழிதேடாமல் இப்பொழுதும் அரசியல்பேசிக் கொண்டே காலம்கடத்தி வருகின்றோம்.

மாண்புமிகு ரம்புக்வெல அவர்கள் ஊடகங்களுக்கு ஒருசெய்தி சொன்னார். “அரசாங்கம் ஒருபில்லியன் டொலர்களை கடன்அடைப்பதற்காக கட்டியுள்ளது என்பதில் பெருமை அடைகின்றேன்” என்றார். ஆனால் அவர்மிகுதி இருக்கும் 34பில்லியன் கடன்அடைக்க வேண்டிய தொகையை எப்பொழுது கட்டப் போகின்றார் என்பது பற்றிக் கூறவில்லை.

எதுஎவ்வாறு இருப்பினும் எமது அந்நியச்செலாவணியின் குறைவினால் சிலநிறுவனங்களால் கடன்கடிதங்கள் திறக்கமுடியாது என்று கூறப்பட்டதாக அறியநேரிட்டது. எமது அந்நியசெலாவணி அந்தஅளவுக்குக் குறைந்துள்ளது அல்லவா? இப்படியேபோனால் எம்மால் பெற்றோலையும் டீசலையும் இறக்குமதி செய்யக்கூட முடியாமல் போய்விடும்.

முன்னொரு காலத்தில் கலாநிதி டபிள்யு தகநாயகா பெற்றோல் விலையைக் கூட்டியமையால் மாட்டுவண்டியில் பாராளுமன்றம் வந்தார். ஆனால் தற்போதையநிலை அதிலும் மிகமோசமானது. கையில்பணம் இருந்தால் கூட வாங்குவதற்குப் பெற்றோலோ டீசலோ இருக்காது.

முன்னெப்பொழுதும் இல்லாத அளவு நாளுக்குநாள், வாரத்துக்கு வாரம், மாதத்திற்குமாதம் நாம் கடதாசி பணத்தாள்களை அச்சிட்டு வந்துள்ளோம். செயற்கை முறைகளினால் சட்டத்திற்கு அமைவற்ற முறைகளினால் நாங்கள் எமது நாணயப்பெறுமதியை ஏற்றி வைத்துக்கொண்டு இருக்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களின் நலனை நினைக்காது நாம்கண்டபடி செயற்பட்டு வருகின்றோம்.

எமதுநாட்டு மக்களை நாங்கள் எங்குகொண்டு வந்துள்ளோம்? பட்டினி, கடன், மனஉளைச்சல் என்ற நெருப்பு எமதுமக்களைத் தாக்கும் நிலையிலும் நாம் நீரோ மன்னர் பிடில் வாசித்தது போல் நடந்துகொண்டு செல்கின்றோம்.

எங்களுக்கு சேதனஉரமே தேவை என்று கூறி நாம் அசேதன உரஇறக்குமதியை நிறுத்திக் கொண்டோம். உயரியசிந்தனை தான்இது. ஆனால் அவ்வாறான ஒரு காரியம் மக்களை இரசாயன உரங்களில் இருந்து பாதுகாக்கவல்ல எடுக்கப்பட்டது. எமது டொலர்களைச் சேமிக்கவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் வழமைபோல் அதற்கான காரணம் தேசப்பற்றின் வெளிப்பாடே என்று கூறப்பட்டது.

இவ்வாறு உர இறக்குமதியை தடை செய்ய முன் விஞ்ஞான ரீதியாக அதன் தாக்கம் ஆராய்ந்து அறியப்பட்டதா? அப்படி எனில் எந்த நிறுவனம் அதற்கான சிபார்சை அரசாங்கத்திற்கு வலியுறுத்தியது? இடைக்காலம் எதனையும் கொடுக்காது திடீர் என்று இந்தக் கைங்கரியத்தில் ஈடுபட எந்த அரச நிறுவனம் அறிவுரை வழங்கியது? இது பற்றிய ஆராய்வுகள் நடைபெற்றனவா? உர இறக்குமதியை உடனே இயற்றினால் எவ்வாறான தாக்கம் எமது பயிர்களின் விளைச்சலில், அறுவடையில் ஏற்படும் என்ற திட்ட அலசல் செய்யப்பட்டதா?

ஆனால் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து நெல்லினை இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அந்த நாடுகளில் இதே இரசாயன உரம் பாவித்தே பயிர்ச் செய்கை நடைபெறுகின்றது. அப்படியானால் உர இறக்குமதியின் காரணம் மக்கள் நலம் அல்ல டொலர்களின் போதமையே என்று புலப்படுகின்றது.

எனினும் இயற்கை உரத்தை எமது பயிர் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பெற எத்தகைய முன்னேற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது? இதுவரை காலமும் செயற்கை உரத்திற்குப் பழக்கப்பட்ட நிலங்கள் இயற்கை உரத்தை ஏற்று போதிய பலன் தர மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகுமல்லவா? அப்படியானால் எமது விளைச்சலில் பாரிய வீழ்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம் அல்லவா? அவ்வாறானால் இவற்றின் உண்மைகளை அரசாங்கம் மக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதா? வரலாற்றின் இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் கூட நாங்கள் அரசியல் பேசிக் கொண்டு காலத்தைக் கடத்துவதன் மர்மமென்ன?

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரு தரப்பு சிங்கள நண்பர்களிடமும் ஒரு வேண்டுகோளை பல தடவைகள் நான் முன்வைத்து வந்துள்ளேன். அதாவது தமிழ் மக்களை உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கி எமது புலம் பெயர் மக்களின் முதலீடுகளுக்கு வழி அமையுங்கள் என்று கேட்டுள்ளேன்.

வெளிநாட்டில் இருக்கும் சிங்கள உறவுகளையும் உள்ளடக்கிய எமது புலம் பெயர் உறவுகள் எம்மால் வேண்டப்படின் கட்டாயமாக அந்நியசெலாவணியைப் போதியவாறு எமது உள்நாட்டு முதலீடுகளில் ஈடுபடுத்த முன்வருவார்கள். இவ்வாறான செயற்பாட்டால் எமது தற்போதைய பொருளாதார சிக்கல் நிலையை நாங்கள் போக்கிக் கொள்ளலாம். ஆனால் எங்கள் சிங்கள அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள். எரியும் நெருப்பைத் தேடிப் போய்த் தம்மை எரித்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். அவர்கள் சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள்!

மீண்டும் ஒரு முறை எமது சிங்கள பௌத்த அறிவுசார் சமூகத்திடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். தமிழர்களையும் முஸ்லீம்களையும் உங்கள் அந்தரங்கத்திற்குள் ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்து போதிய முதலீடுகளை நாட்டிற்குள் வரவழையுங்கள். இதன் மூலமாக எமது அந்நியச் செலாவணிப் பிரச்சனைகளை நாங்கள் விரைவில் தீர்த்துக் கொள்வோம். இந்த நாட்டைக் காப்பாற்ற நாம் யாவரும் இணைய வேண்டிய முக்கிய தருணம் இது தான் என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button