இரு மாத குழந்தை குத்தி படுகொலை! பிரித்தானியாவில் பயங்கரம்!

பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்து பகுதியில், ஒருபெண் பிறந்து இருமாதங்களே ஆன குழந்தையை 29வயது பெண் ஒருவர் குத்தி படுகொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வட அயர்லாந்திற்குட்பட்ட வடக்கு பெல்பாஸ்ட் பகுதியிலே உள்ள ஆர்டோய்னே எனும் இடத்திலே நேற்று (செவ்வாக்கிழமை) இரவு இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரமான அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, Brompton Park பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்து பார்த்த போது இருமாத பச்சிளம் குழந்தை குத்தப்பட்டு இறந்து கிடந்தது. அதனருகே, இரு வயதுடைய குழந்தை ஒன்று பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

அந்த குழந்தையையும், அடிபட்டு கிடந்த அவர்களது தாயையும் பொலிஸார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவ இடத்தில், கொலையாளி என நம்பப்படும் 29 வயதுள்ள பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அத்தோடு கொலையாளி என நம்பப்படும் பெண் யார் என்பது குறித்த தகவலை பொலிஸார் வெளியிடவில்லை.

குடும்ப தகராறு காரணமாக குறித்த கொலை முயற்சி நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

Exit mobile version