மனித எலும்புக்கூடுகளும் துப்பாக்கியும் மீட்பு! விசாரணைகள் ஆரம்பம்!

புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட மதுரங்குளிய பகுதியில் உள்ள  காணி ஒன்றில் இருந்து துப்பாக்கியும் மனித எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளை நடாத்தி அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.அசேல டி சில்வா முந்தலம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்த பகுதியிலுள்ள காணியில் மனித உடல் எச்சங்கள் மற்றும் துப்பாக்கி கிடப்பதைக் கண்டு பிரதேச மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மனித உடல் எச்சங்களையும் துப்பாக்கியையும் கைப்பற்றினர்.

சில காலத்துக்கு முன்பு உயிரிழந்த ஒருவர் அல்லது இருவரின் உடல் எச்சங்களாக இவை இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 99 எம்.எம். ரக துப்பாக்கியே இதன் போது கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளை முந்தலம் பொலிஸார் துரிதப்படுத்தி  வருகின்றனர்.

Exit mobile version