மூன்று பெண்கள் மீது கொடூர தாக்குதல்! புத்தளத்தில் சம்பவம்!

புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட மாரவில, மாவில பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் அத்துமீறி பிரவேசித்த கும்பல் ஒன்று அங்கிருந்த மூன்று பெண்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காதல் விவகாரம் ஒன்றினாலேயே இந்த கொடூர தாக்குதல் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

குறித்த வீட்டினுள் பிரவேசிக்கும் சில பெண்கள் அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் ஆண்கள் சிலரும் வீட்டினுள் புகுந்து குறித்த பெண்களை தாக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவில் பதிவாகி உள்ளது.

குறித்த தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சம்பவ இடத்தில் இருந்து வாள்கள், பொல்லுகள் மற்றும் இரும்பு சங்கிலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட குழுவினை சேர்ந்த யுவதி ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளான குழுவை சேர்ந்த இளைஞன் ஒருவரும் காதலித்து வந்துள்ள நிலையில் பின்னர் அவர்கள் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை அடுத்து குறித்த இளைஞன் வௌிநாடு சென்றுள்ளதாகவும் பின்னர் யுவதியின் புகைப்படங்களை மாற்றியமைத்து சமூக ஊடகங்களில் வௌியிட்டதாக தெரிவித்து இளைஞனின் தாயாருக்கு பல சந்தர்ப்பங்களில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version