குருந்தூர் மலையை மீட்கும் முயற்சிகளில் தமிழ் தரப்புக்கள் தீவிரம்!

பெளத்த முற்றுகைக்குள் உள்ளாகியுள்ள முல்லைத்தீவு குருந்தூர் மலையை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்

குருந்தூர் மலையினை பெளத்த முற்றுகையில் இருந்து மீட்பதற்காக  கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கினை  தொடர்வதற்கான முயற்சிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வழக்கினை தொடர்வதற்கான ஆரம்ப பணிகளில் அனேகமான பணிகள் முடிவுக்கு வந்துள்ளது.

குருந்தூர் மலையினை மீட்பதற்காக விரைவிலே வழக்கு தொடரப்படும்.

குருந்தூர்மலையானது தமிழர்களது பூர்வீக வழிபாட்டு தலமாகும்.

இதில் பெரும்பான்மை இனத்தவர்களது, அரச திணைக்களங்களும், பாதுகாப்புத் தரப்பினரின் அனுசரணையுடன் பௌத்த மததிணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வழக்கினை தொடர்வதற்காக, பாரிய அளவிலான ஆவணங்களை  திரட்டியுள்ளோம்.

வழக்கினை தொடர்வதற்கான பெரும்பகுதி வேலைத் திட்டங்கள் முடிவடைந்துள்ளன. எனவே, விரைவில் வழக்கு தொடரப்படும்.

எம்மால் தொடரப்படுகிற இந்த வழக்கின் ஊடாக, தமிழர்களது காணாமல் போன வழிபாட்டு அடையாளங்களை மீள நிறுவுவதற்கும், எமது பூர்வீக வழிபாட்டு தளத்தில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை  தடுப்பதற்குமான முழுமுயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றார்.

Exit mobile version