அரச உடமையாக்கப்பட்ட உணவு பொருட்கள் மானிய விலையில் மக்களுக்கு!

சட்டபூர்வமற்று கொண்டுவரப்பட்டு அரச உடமையாக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மானிய விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

துறைமுகத்தால் விடுவிக்கப்படாததும் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் அரச உடமையாக்கப்பட்டதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமையால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் பற்றாக்குறையின்றி விநியோகிக்கும் பொறிமுறையொன்று தற்போது லங்கா சதொச நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த பொறிமுறையைத் தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்கு இயலுமான வகையில் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை சுங்கத்தால் அரச உடமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது .

Exit mobile version