காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத யுவதியை கத்தியால் குத்திய காதலன்!

கடந்த 21ஆம் திகதி லபுதுவவில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், இளைஞர் ஒருவரால் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்தார்.

இது தொடர்பாக முன்னர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

காலியில் உள்ள உயர்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் இலத்திரனியல் பொறியியல் கல்வி கற்கும் 23 வயதுடைய 3ம் வருட மாணவி, கடந்த 21ம் திகதி லபுதுவ மருத்துவக் கல்லூரி நுழைவாயிலுக்கு அருகில் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

மொனராகலை தனமல்வில பகுதியை சேர்ந்த மாணவியே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

கத்தியால் குத்திய நபர் இதற்கு முன்னர் ஏழு தடவைகள் தனது மகளை அச்சுறுத்தியுள்ளதாகவும், இது தொடர்பில் தனமல்வில பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மாணவியின் தந்தை கூறுகிறார்.

எனினும் இது தொடர்பில் தனமல்வில பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாணவியின் தந்தையும் பொலிஸ் அதிகாரி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கத்தியுடன் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

Exit mobile version