தமிழீழத்திற்கான வரைபே இந்திய பிரதமருக்கு அனுப்பப்படுகிறது!

இந்திய பிரதமருக்கான ஆவணத்தை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மட்டும் கையொப்பமிட்டு அனுப்புமாக இருந்தால் அது விடுதலை புலிகளின் கனவான தமிழீழத்திற்கான வரைபாகவே இருக்குமென கல்வி அமைச்சர் தினேஸ்  குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரிடம் ஒப்படைப்பதற்காக தமிழ் பேசும் தரப்புக்களது பொது நிலைப்பாட்டினை பிரதிபலிக்கும் ஆவணத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகளின் தலைவர்கள் மட்டும் இன்று ஒப்பமிட்டனர். இதில் மலையக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எவரும் ஒப்பம் இடவில்லை.

இன்று இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனி கூறினார்.

“தமிழ் பேசுகின்ற கட்சிகளுக்கு இடையில் – பொதுவான இணக்கப்பாடு இல்லை; ஒற்றுமை இல்லை. இந்திய பிரதமருக்கு என தயார் செய்யப்பட்ட பொது ஆவண விடையம் இதனை வெளிக்காட்டுகின்றது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் இங்குள்ளவர்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வினை  வழங்காது.

எமது நாட்டின் உள் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை. நாட்டின் அரசுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும்.

தமிழ், முஸ்லிம், மலையக மக்களது அனைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நடவடிக்கையில் எமது அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்பேசும் கட்சி தலைவர்கள் எம்மை நாடாமல் சர்வதேசத்தினை நாடுவதுதான் விசித்திரமாக உள்ளது” – என அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version