பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளமையால் தேசிய எரிபொருள் விநியோக கட்டமைப்பிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்டாது. எதிர்வரும் காலத்திற்கு தேவையான எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆகவே எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு மூடும் தீர்மானம் அறிவிக்கப்பட்டதை அடுத்து நுகர்வோர் வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்வனவு செய்கிறார்கள்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரு நாட்களுக்கு தேவையான அளவு எரிபொருள் மாத்திரமே களஞ்சியப்படுத்தப்பட்டு இருக்கும் வழமைக்கு மாறாக எரிபொருள் கொள்வனவு செய்யும் போது எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இரு தினங்களுக்கு 3,200 மெற்றிக்தொன் எரிபொருளை விநியோகிக்கப்படும் நேற்று முன்தினம் மேலதிகமாக 600 மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வழமையாக இரு நாட்களுக்கு 5,200 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் விநியோகிக்கப்படும் தற்போது டீசலும் மேலதிகமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் விடயம் பொய்யானது.

டிசம்பர் மாத பாவனைக்கு தேவையான அளவு எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே எக்காரணிகளுக்காகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என நுகர்வோர் அச்சம் கொள்வது அநாவசியமானது. தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் பெற்றுகொள்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது எரிபொருள் நிரப்பும் நிலையங்களிற்கு வழமைக்கு மாறாக மேலதிக எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version