காணாமல் போன சிறுமிகளுக்கு நடந்தது இது தான் – சிறுமிகள் வாக்கு மூலம்!

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 3 சிறுமிகள் காணாமல் போய் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவுஅவர்கள் வீட்டிற்கு திரும்பி இருந்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து  சிறுமிகள் வழங்கிய வாக்குமூலத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 8ம் திகதி 13 – 15 வயதிற்கு இடைப்பட்ட 3 சிறுமிகளை காணவில்லை என சிறுமிகளின் பெற்றோர் வாழைத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில்  நேற்று இரவு குறித்த 3 சிறுமிகளும் வீடு திரும்பினர்.

குறித்த மூன்று சிறுமிகளும் அவர்களுடைய தாயின் தொலைபேசியை எடுத்து  கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். அவர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அவர்கள் கையில் இருந்த இரு மோதிரங்களையும் விற்று பணம் பெற்று கொழும்பில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்திற்கு சென்று நவீன ஆடை மற்றும் பிற சாதாரண உடைகள் போன்ற ஆடைகளை வாங்கி உள்ளனர்.

அந்த ஆடைகளை அணிந்து கொண்டு குறித்த சிறுமிகள் அவர்களுடைய உடைகளை மாற்றி கொண்டு அனுராதபுரம் நோக்கி செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளனர்.

குறித்த 3 சிறுமிகளும் நடனம் மற்றும் இசைக்கு விருப்பம் உள்ளவர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடன, இசை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் விருப்பத்துடன் பார்த்துள்ளார்கள். அவர்களுக்கும் அவ்வாறு நடனம் ஆட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவாகியுள்ளது.

இருப்பினும் அவர்களுடைய வீட்டில் அனுமதி இல்லாத காரணத்தால் இணையத்தை பயன்படுத்தி இங்குள்ள நடன வகுப்புக்களை தேடி பார்த்துள்ளார்கள்.

நடன வகுப்புக்களுக்கு சென்று நடனம் பயில வேண்டும் என்ற கனவுடன் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். எனினும் அவர்கள் நினைத்ததை போல் அவர்களுக்கு முதல் நாளில் செய்ய முடியாமல் போயுள்ளது.

அவர்கள் ஆடைகளை மாற்றி, வத்தளையில் உள்ள நடன குழுவில் சேர முயற்சித்துள்ளார்கள். அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், 3 சிறுமிகளும் அனுராதபுரம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். பின் கொழும்பிற்கு வந்த சிறுமிகள் மீண்டும் கண்டி நோக்கி சென்றுள்ளனர்.

அங்கு காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் கொழும்பு நோக்கி வந்துள்ளனர். இந்நிலையில், நடனக் குழுவில் இணைவதற்காக, சிறுமிகள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உதவி பெறுவதற்காக அவருடைய காரியாலயத்திற்கு சென்றுள்ளனர்.

இருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அங்கு யாரும் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினூடாக ஒரு விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், இப்படியான இளம் வயதினர் நடனம், இசை, நாகரிக உடைகளுக்கு ஆசைப்படுகிறார்கள்.

ஆனாலும் வீடுகளில் அவற்றுக்கு அனுமதிகள் இல்லாத காரணத்தினால் தான் இந்த சிறுமிகளும் வீட்டை விட்டு சென்றுள்ளார்கள் என்பது அவர்களுடைய வாக்கு மூலங்களில் தெரியவருகிறது என சுட்டி காட்டியுள்ளார்.

Exit mobile version