ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் நால்வர் கொலை!

ஆப்கானிஸ்தானில் ஆட்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 பேரைக் கொலை செய்த தலிபான்கள், அவர்களின் உடலங்களை, சந்தி ஒன்றில் தொங்கவிட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள் இதனைக் கூறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

தலிபான்களுடன் இடம்பெற்ற சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும், பின்னர் அவர்களுடைய உடலங்கள் பொது வெளியில் தொங்கவிடப்பட்டதாகவும் ஹெராட்டில் உள்ள தாலிபன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாஸ்டோஃபிட், கோல்ஹா, டார்ப்-இ-மாலிக், டார்ப்-இ-இராக் ஆகிய இடங்களில் உள்ள சாலை சந்திப்பில் இவர்களுடைய உடலங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கண்ணால் கண்ட சாட்சிகள் கூறுகின்றன.

இவர்கள் ஒரு வர்த்தகரையும் , அவரது மகனையும் கடத்தி அவர்களின் குடும்பங்களிடம் இருந்து பணம் கோரியதாக, தாலிபன் அதிகாரியை மேற்கோள் காட்டி டோலோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version