ஈழ பாடகர் திரு வர்ண ராமேஸ்வரன் கொரோனாவால் பலி!

ஈழத்தின் மாவீரர் தின துயிலுமில்ல பாடலான ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே’ எனும் பாடல் உட்பட, பல விடுதலை பாடல்களை பாடிய ஈழ பாடகர் கலைஞர், இசைக்கலை மாமணி திரு வர்ண ராமேஸ்வரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அடுத்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலன் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்காக வந்து மீள கனடாவிற்கு  திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் “எங்கே எங்கே ஒரு தரம் உங்கள் விழிகளைத் திறவுங்கள்’ என கேட்கும் போது கண்ணீரை வர வைக்கும் துயிலும் இல்ல பாடலான “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” பாடல் ஊடாக இவர் நன்கு பரிச்சயமானவர்.

யாழ்ப்பாணத்தின் அளவெட்டி சிறுவிளான் எனும் சிற்றூரில் பிறந்த இவர், யாழ்ப்பாணம், வன்னி, கொழும்பு என வாழ்ந்து கால ஓட்ட மாற்றத்தில் புலம்பெயர்ந்து அவர் இறக்கும் வரை கனடாவில் வசித்து வந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக இருந்த இவர், தென் இந்தியாவில் சென்னையிலும் இசை பயின்றார்.

அத்தோடு கனடாவில் வர்ணம் எனும் இசைப் பள்ளியினை நடாத்தி வந்தார்.

விடுதலை எழுச்சிப் பாடல்கள் பலவற்றை பாடி மக்கள் இடத்தில் நீங்கா இடத்தைப் பிடித்த இவரின் மறைவு உலக தமிழினத்திற்கு பேரிடியை உண்டாக்கியுள்ளது.

Exit mobile version