கொழும்பில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் வெளியான வாக்குமூலம்!

அண்மையில் கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையிலிருந்து பணப் பரிசில் பெறும் நோக்கில் இவ்வாறு குண்டை வைத்துவிட்டு, அது தொடர்பில் தகவல் அளித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் விசாரணைகளில் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைக்குண்டானது, கொழும்பு 7 விஜேராம பகுதியில் உள்ள பிரபு ஒருவரின் வீட்டிலிருந்து தனக்கு கிடைத்ததாக சந்தேக நபர் விசரணையின் போது பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்ததாக அறிய முடிகின்றது.

குறித்த வீட்டில் சந்தேகநபர் 3 மாதங்களுக்கு முன்னர் புதுப்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது அவ்வீட்டின் அறையொன்றில் இருந்து இந்த குண்டு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, சந்தேக நபர் கூறும் வீட்டில் தற்போது அமைச்சர் ஒருவர் குடியிருப்பது தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் சந்தேக நபர் கூறும் மாதங்களுக்கு முன்னரான காலப்ப்குதியில் அவ்வமைச்சர் அங்கு இருக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் உண்மைத் தன்மை தொடர்பிலும் மேலதிக விடயங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Exit mobile version